ஈரான் அரசு, ஹார்முஸ் நீர்சந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் இனிமேல் அமெரிக்க டாலருக்கு பதிலாக ஈரானிய ‘ரியால்’ நாணயத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிலவும் பதற்றநிலைக்கிடையில், ஓமன் நாட்டுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் நீர்சந்தி வழியாகவே உலகின் சுமார் 20% கச்சா எண்ணெய் மற்றும் 25% இயற்கை எரிவாயு கடத்தப்படுகிறது. இந்த பகுதியை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், கப்பல்களுக்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கி வருகிறது. புதிய திட்டத்தின் படி, ஒரு கப்பலுக்கு சுமார் 2 மில்லியன் டாலர் மதிப்பிலான ரியால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி இல்லை. அதேசமயம், இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஈரான் “நட்பு நாடுகள்” என வகைப்படுத்தி, அவற்றின் கப்பல்களுக்கு பாதுகாப்புடன் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பயண விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை, போருக்கான செலவுகளை சமாளிக்கவும், ஈரானின் நாணயத்தை வலுப்படுத்தவும், மேற்கத்திய நிதி அமைப்புகளின் தாக்கத்தை குறைக்கவும் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

