தமிழகத்தில் நடுத்தர, ஏழ்மையான மற்றும் வருமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்கள் பெரிதும் நம்பி இருப்பது பொது விநியோகமுறையை தான். ஊர்தோறும், கிராமங்கள் தோறும் இருக்கும் அரசு நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் அரிசி, சர்க்கரை மற்றும் இதர பிற மளிகைப் பொருட்கள் இவர்களின் பொருளாதாரச் சூழ்நிலைக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
நடுத்தர குடும்பங்களிலேயே பொருளாதாரச் சூழ்நிலை சற்று குறைவாக உள்ள குடும்பங்கள், ஏழை குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவச அரிசி பெரிதும் உதவுகிறது. இவ்வாறு தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டம் முறையாக, வெற்றிக்கரமாக நடைபெறுகிறது. நியாயவிலைக் கடைகளில் பெறும் பொருட்களை முறையாக கணக்கிட ரேஷன் அட்டை குடும்பம் தோறும் வழங்கப்பட்டது. பின்னர் ரேஷன் அட்டைகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டது. ஸ்மார்ட் கார்டு முறை பொது விநியோகத்தை எளிமையாக்கியது.
தற்போது பொது விநியோகத்தை இன்னும் எளிமையாக்க யுபிஐ வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பேடிஎம், போன்பே, கூகுள்பே போன்றவைகள் மூலம் நியாயவிலைக் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த முடியும். இது தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து நியாயவிலைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படும். யுபிஐ பயன்பாடு மற்றும் மக்களிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.