கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, ஊபர் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கார்களை புக் செய்து பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, நாடு முழுவதும் கால் டாக்சிகளை பல ஆயிரக்கணக்கானோர் இயக்கி வருகின்றனர். இவர்களுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும், நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் ஓட்டுநர்களும் கார் உரிமையாளர்களும் புகார்களை தெரிவிக்கின்றனர். மேலும் பைக் டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனை வலியுறுத்தி, இன்று முதல் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இன்றும் நாளையும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடும் கால் டாக்சி ஓட்டுநர்கள், வரும் 18ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால், 2 நாட்களுக்கு சென்னையில் கால் டாக்சி சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

