தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை நிறைவு செய்து இன்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த விஜயை அக்கட்சித் தொண்டர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர். அதன்பின் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சியை கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.
கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலையை விஜய் திறந்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், த.வெ.க தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஜனநாயகப் பெரு நிகழ்வைத் தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்ற பேரிலக்கை நோக்கி தொண்டர்கள் இப்போதே உழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
1967 இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒருபெரும் மாற்றம் தொடங்கியதாகவும், பின்னர் 1977 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அரசியல் அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறியுள்ள விஜய், அத்தகைய ஒரு அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம் என்றும் சூளுரைத்துள்ளார்.

