18ஆவது மக்களவை கூட்டத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதலாவது உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று பாஜக கூட்டணி கட்சிகள் துணையுடன் ஆட்சியமைத்தது. இதையடுத்து பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார்.
இதையடுத்து இன்று முதல் மக்களவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதலில் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாபுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ பதவி பிரமாணம் செய்து வைத்தார். காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடங்கியதும், பிரதமர் மோடியை எம்.பி. ஆக பதவியேற்க, தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் அழைத்தார்.
இதையடுத்து பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பலத்த கரகோஷத்துக்கு இடையே பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மோடி, இன்று கூடவுள்ள மக்களவை புதிய ஜனநாயகத்தின் தொடக்கம் என தெரிவித்தார். 3ஆவது முறையாக பிரதமர் ஆகியுள்ளதால், இனி அனைத்து திட்டங்களுக்கும் 3 மடங்கு முக்கியத்துவம் தரப்படும் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் எம்.பி.களாக பதவியேற்றனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தரை வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கனரக தொழில்கள் அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோர் பதவியேற்றனர்.
இதையடுத்து பதவியேற்ற சில அமைச்சர்கள் தங்களது தாய் மொழியில் பதவியேற்றனர். குமாரசாமி, பிரகலத் ஜோதி ஆகியோர் கன்னடத்திலும், ராம் மோகன் நாயுடு தெலுங்கிலும், சர்பானந்தா சோனாவால் அசாமியிலும், தர்மேந்திர பிரதான் ஓடியாவிலும் பதவியேற்றனர்.

