உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் மகா கும்பமேளா நடைபெற்றது. மாநில சுற்றுலா கழகத்தின் திரிவேணி சங்கம கரை அருகே 2,100 கூடாரங்கள் மற்றும் 110 தனிக்குடில்கள் கட்டப்பட்டன. இவற்றில் தங்குவதற்கான முன்பதிவுகளை இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இணையதளத்தில் செய்தனர். இந்த வசதிகளை உ.பி. அரசு வழங்கியது. சர்வதேச தரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடாரங்கள் மற்றும் குடில்கள் இருந்ததால், லட்சக்கணக்கான வெளிநாட்டினரும் இங்கு தங்கினர். இதற்கிடையில், தங்கும் கூடாரங்கள் மற்றும் உணவு விடுதிகள் மூலம் மாநில சுற்றுலா கழகத்திற்கு சுமார் ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மகா கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் தனியார் கூடாரங்களுக்கும் வருவாய் கிடைத்தது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், பிரயாக்ராஜ் நகரம் சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது. மகா கும்பமேளா உலக சுற்றுலா நிகழ்ச்சிகளின் அனைத்து சாதனைகளை முறியடித்துள்ளது, இந்நிலையில் சுமார் 55 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர். 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா, பல்வேறு வழிகளில் வரலாற்றை உருவாக்கியுள்ளது. இங்கு 73 நாடுகளின் தூதர்கள் மற்றும் 116 நாடுகளின் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வந்துள்ளனர். நேபாளம், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, கனடா, வங்கதேசம், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், மலேசியா, நியூசிலாந்து, இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு கலந்து கொண்டுள்ளனர்.

