மொரீஷியாவின் 57-வது தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்தின் அழைப்பின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி, 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். இந்தியாவின் மானிய உதவியுடன் உருவாக்கப்பட்ட சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் சமூக சுகாதார மையங்களை திறந்து வைக்கவும், 20 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோரீஷஸ் 1968, மார்ச் 12-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் மோரீஷஸ் தேசிய தினமாக கொண்டாடுகிறார்கள். கடந்த ஆண்டு, மோரீஷஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
