ரஷ்ய அதிபர் புதின் வேகமான வளர்ச்சி மற்றும் வளமான எதிர்காலத்தை கொண்ட இந்தியாவிற்கு வல்லரசு அங்கீகாரம் கொடுக்க வலியுறுத்தியுள்ளார்

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் ரஷ்யா

இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற வேண்டும் என்பதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.2004-ம் ஆண்டு தொடங்கிய வால்டாய் விவாத மன்றம், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்றது. சமீபத்தில், சோச்சி நகரில் நடைபெற்ற கூட்டத்தில், புதின் மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்ய கூட்டணியில் இல்லாத நாடுகளை எதிரியாக கருதவில்லை என தெரிவித்தார். அவர் மேலும், எந்த நாட்டின் மீது கருத்துகளை திணிக்க முயற்சிக்கவில்லை என்றும், ரஷ்யா சுதந்திரமாக செயல்படுவதாகவும் கூறினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகள் ரஷ்யாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் உறுதியாக தெரிவித்தார்.உலகத்துக்கு ரஷ்யாவின் பங்களிப்பு மிகவும் அவசியம் எனவும், உலகளாவிய அளவில் புதிய மாற்றங்கள் தற்போது உருவாகி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் சதியால், உக்ரைனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வீழ்ந்துள்ளது. இதன் விளைவாக, ரஷ்யா தனது சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உக்ரைனை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன என அவர் கூறினார். மேலும் இந்தியா, சுமார் 150 கோடி மக்கள்தொகையுடன், உலகில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடாகவும், பழமையான கலாச்சாரத்தையும், வளமான எதிர்காலத்தையும் கொண்ட நாடாகவும் பெருமைபடுகிறது. இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான அனைத்து தகுதிகளும் இதில் உள்ளன. உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற வேண்டும். இந்தியா மற்றும் ரஷ்யா, பல துறைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன, குறிப்பாக பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்தியாவின் முப்படைகளில் ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், அந்த நாட்டுடன் இணைந்து ஆயுத உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறோம். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக பிரம்மோஸ் ஏவுகணையை குறிப்பிடலாம், இது தரை, வான் மற்றும் கடல் ஆகிய மூன்று தளங்களில் செயல்படக்கூடியது.இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விநியோகம் தொடரும். இந்திய அணு சக்தி துறைக்கு தேவையான ஆதரவை வழங்குவோம். பிரதமர் நரேந்திர மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டம் மிகவும் முக்கியமானது, இதில் ரஷ்யா இணைந்து செயல்படுகிறது. இந்திய வேளாண் துறைக்கு தேவையான உரங்களை தொடர்ந்து வழங்குவோம்.இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நீண்ட காலமாக உறவுகள் நிலவுகின்றன, இது எதிர்காலத்திலும் தொடரும் என புதின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *