யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அவர் கோவை சிறையிலிருந்து விடுதலையானார்.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோயமுத்தூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என சவுக்கு சங்கர் கோரியபிறகு, இந்த விசாரணையில் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, சவுக்கு சங்கர் கார் மற்றும் தங்கியிருந்த அறையில் தேனி போலீசார் சோதனை செய்ததில், அங்கிருந்து 409 கிராம் கஞ்சா இருப்பது கண்டறிந்து கைப்பற்றப்பட்டது. இதில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி, தமிழக அரசுக்கு எதிராக போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு சங்கரின் தாயார் தாக்கல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ஆகஸ்டில் ரத்து செய்தது.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில், அவருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தொடர்ந்த வழக்கில், அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றதாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கை தவிர வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லாதபட்சத்தில் அவரை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, மதுரை மத்திய சிறையில் இருந்து யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

