அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் நடத்த வேண்டாம் என்றும், அவரவர் வீடுகளில் மட்டும் கொண்டாடுமாறும் பல்வேறு இந்து அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.அமெரிக்காவில் சுமார் 55 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கலிபோர்னியா, டெக்சாஸ், நியூஜெர்சி, நியூயார்க், புளோரிடா உள்ளிட்ட பல மாகாணங்களில் இந்தியர்கள் மீதான இனவெறி தொடர்பான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்து அமைப்புகள் இந்த ஆண்டு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளன.இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளில், அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளன.மேலும், குடியிருப்பு பகுதிகள், காலனிகள், சாலைகள், தெருக்கள் மற்றும் பிற பொது இடங்களில் கூட்டமாக விழாவை நடத்துவதை தவிர்க்குமாறும் அந்த அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அனைவரும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதே இந்த அறிவுரையின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

