உக்ரைன் உடனான போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. இதன் விளைவாக ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்த போரின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான தங்களது தொடர்புகளை துண்டித்துக் கொண்டன.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ‘உக்ரைன் நாட்டுடனான போர் தற்போது முடிவுக்கு வருவதாக நினைக்கிறேன்’ என்று கூறினார். முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாரா என கேட்டதற்கு, ‘ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஸ்க்ரோடர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறேன்’ என புதின் தெரிவித்தார். ரஷ்யாவுடன் உறவை துண்டித்த ஐரோப்பிய நாடுகள் தான் முதலில் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று அதிபர் மாளிகை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

