அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாக திறனற்ற திமுக அரசு எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் 14 ஆம் தேதியே எச்சரித்தபோதும், திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டதாக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினர் தங்கள் பக்கம் இருப்பதால் முதலமைச்சர் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

