சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு செய்கிறார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார்.
மிக்ஜாம்’ புயலால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் மிச்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், மாநகராட்சி ஊழியர்களும் இரவு – பகல் பாராமல் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ களத்தில் அயராது உழைத்து வருகின்றனர். மேலும் நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

