தைவான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவு, கடந்த 25 வருடங்களில் மிகப்பெரிய இயற்கை பேரழிவு

இந்தியா இயற்கை பேரிடர் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி ஜப்பான்

ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதமடைந்தன. அந்நாட்டின் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில், 34.8 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
தைவான் தலைநகர் தைபேவில், ஹூவாலியன் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டடங்களும் குலுங்கின. இவ்விரு நகரங்களிலும் ஏராளமான கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு சரிந்தன. மேலும், சாலைகளில் ஆங்காங்கே பிளவுகள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அத்துடன், சாலைகளில் சென்றுகொண்டிருந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சேதம் விவரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக தைவானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜப்பானில் மியூகோசிமா பகுதியில் 10 அடிக்கு மேல் சுனாமி அலையின் தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *