சைவ உணவு விரும்பி, இசைக் கலைஞர், சிக்கலான தருணங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். பொதுவுடைமை கொள்கையை தீவிரமாக பின்பற்றுபவர் என அறியப்படும் பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.
தனது 52-வது வயதில் அரசியலில் கால் பதித்து 61 ஆவது வயதில் அதாவது ஒன்பதே ஆண்டுகளில் நாட்டின் பிரதமராகியுள்ளார் கியர் ஸ்டார்மர். 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 85 ஆண்டுகளில், இல்லாத பின்னடைவை சந்தித்து. இதனை தொடர்ந்த தொழிலாளர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டார்மர் ஐந்தே ஆண்டுகளில் கட்சிக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்து அரியணையில் ஏறியுள்ளார்.
1963- ஆம் ஆண்டு பிறந்த ஸ்டார்மரின் தந்தை தொழிற்சாலை ஒன்றில் டூல் மேனாக பணியாற்றியவர். அவரது தாயர் செவிலியாக இருந்தவர். சோஷியலிச கருத்துக்களை கொண்ட ஸ்டார்மரின் பெற்றோர், அவருக்கு தொழிலாளர் கட்சியின் நிறுவனரான கியெர் ஹார்டியின் பெயரை சூட்டினர். இளம் வயதிலேயே சோஷியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஸ்டார்மர் தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின் சோஷியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார். புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞராக பதிவு செய்தார்.
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்வதை அவர் நோக்கமாக கொண்டுள்ளதையும் அவரது தேர்தல் அறிக்கை வெளிப்படுத்தி இருந்தது. மேலும் கல்வி, காலநிலை மாற்றம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்தவும், இந்தியாவை வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக அங்கீகரிப்பதில் ஸ்டார்மர் நாட்டம் கொண்டுள்ளார் என்பதையும் அவரது தேர்தல் அறிக்கை கோடிட்டு காட்டியிருந்தது. முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமானவராக பார்க்கப்படுபவர், அந்த இடத்தை ஸ்டார்மரும் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

