கரூரில், 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் தொடர்ந்து 35 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து தனிபடை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலி சான்றிதழ் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்தாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு 25 ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14ம் தேதி புகார் அளித்தார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி மற்றும் வாங்கல் வழக்குகளில் தாக்கல் செய்திருந்த தலா இரு முன் ஜாமீன் மனுக்கள் இம்மாதம் 6 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை இன்று கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

