மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படாலம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இன்று பகல் 12 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியுள்ளது. அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 62,870 கன அடியாக உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டிள்ளது.
மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் எந்நேரத்திலும் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு 6 மாவட்ட ஆட்சியர் உட்பட 15 துறைகளுக்கு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

