இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. துபையில் நடைபெற்ற 24 மணி நேர சீரிஸ் கார் பந்தயத்தில், கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியா சார்பில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் நடிகர் அஜித் குமார் தனது குழுவுடன் கலந்து கொண்டார். அங்கு 911 ஜிடி3 ஆர் என்ற கார் பந்தயப் பிரிவில், அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தை அடைந்தது. மேலும், அஜித் அணிக்கு ‘ஸ்பிரிட் ஆப் தி கேம்’ என்ற விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 23 ) இத்தாலியில் நடைபெற்ற முகெல்லோ 12ஹெச் ரேஸில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. 12 மணி நேரம் நீடிக்கும் இந்த பந்தயத்தில், ஜிடி992 பிரிவில் போட்டியிட்ட அஜித் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது வெற்றியைத் தொடர்ந்து, அஜித் தனது அணியுடன் இந்திய கொடியை எந்தினார். பின்னர், தன்னைக் காண வந்த ரசிகர்களுக்கு வெற்றிக் கோப்பையை காட்டி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். துபாய்யைத் தொடர்ந்து, அஜித்குமார் ரேசிங் அணி இத்தாலியில் மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. திரைத் துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை வழங்கி வருகின்றனர்.

