அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலக மின்சார கார் உற்பத்தியில் முன்னணி இடத்தை வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் மூலம், 15 நிமிடங்களில் டெஸ்லா மின்சார கார்களை சார்ஜ் செய்வது சாத்தியமாகிறது, இதன் மூலம் 320 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்யலாம். இந்நிலையில், சீனாவின் பிஒய்டி நிறுவனம் டெஸ்லாவின் சாதனையை முறியடித்துள்ளது. பிஒய்டி நிறுவனம் தனது சூப்பர் இ-பிளாட்பார்ம் சார்ஜரை உருவாக்கி, 5 நிமிடங்களில் கார்களை சார்ஜ் செய்யும் படி உருவாக்கியுள்ளது. ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 400 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்ய முடியும். முதலில், பிஒய்டி நிறுவனத்தின் ஹான் எல் மற்றும் டேங் எல் மின்சார கார்களில் இந்த 5 நிமிட சார்ஜ் வசதி அறிமுகப்படுத்தப்படும். பின்னர், பிஒய்டி அனைத்து மின்சார கார்களிலும் இந்த வசதி படிப்படியாக வழங்கப்படும். சீனாவில் புதிய தொழில்நுட்பத்திற்காக 4,000 அதிவேக சார்ஜிங் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஒய்டி நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டில் 42 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன, மேலும் அந்த நிறுவனம் இதனை 60 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது, பிஒய்டி நிறுவனத்தின் 90 சதவீத கார்கள் சீனாவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.ஐந்து நிமிட சார்ஜிங் வசதியால் பிஒய்டி கார்களின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

