புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான வலியுறுத்தலுடன், 16-வது முறையாக சட்டபேரவையில் அரசு முன்வைத்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவைத் தலைவர் செல்வம் பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. 12-ஆம் தேதி, முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் முடிவுக்கு வந்த நிலையில், இன்று இறுதி நாளான தனிநபர் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. மத்திய அரசுக்கு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஏற்கனவே 15 முறை ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் இதனை முன்வைத்தனர். இதற்குப் பிறகு, தனி நபர் தீர்மானத்தை முதலமைச்சர் ரங்கசாமி அரசு தீர்மானமாக கொண்டு வந்தார். அதன் பின்னர், அவைத் தலைவர் செல்வம், மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தேதியின்றி, புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

