நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் நாட்டின் தனியார் ஆய்வு விண்கலம். நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் அனுப்பிய விண்கலங்களின் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன. மேலும், பல்வேறு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஜப்பானின் டோக்கியோ நகரை சேர்ந்த ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவை ஆய்வு செய்வதற்காக ‘ரெசிலியன்ஸ்'(Resilience) என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும், தற்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் விண்கலம் சுற்றி வருவதாகவும் ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்கலம் மணிக்கு சுமார் 5,800 கி.மீ. வேகத்தில் நிலவை சுற்றி வருகிறது. இந்த விண்கலம் இன்று நள்ளிரவு நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்கலம் நிலவில் தரையிறங்கிய பிறகு விண்கலத்தில் இருந்து ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்பேஸ் நிறுவனம் நிலவுக்கு அனுப்பிய விண்கலம், தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

