மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றவையாகவும் செயல்படுகின்றன.சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலிக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டொன்றுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் உள்ள விக்கிரவாண்டி, திருச்சி, சேலம் மேட்டுப்பட்டி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

