ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய குடும்பம் பிரிட்டனில் சாதனை படைத்துள்ளது. ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த இந்த குடும்பம் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது. தற்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த துஷார் குமார் மற்றும் அவரது தாய் பர்வீன் ராணி ஆகியோர் அடுத்தடுத்து மேயர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.23 வயதான துஷார் குமார், பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் மேயராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி இளைஞராக பெருமை பெற்றுள்ளார். அவர் ‘எல்ஸ்ட்ரி மற்றும் போஹம்வுட்’ நகர சபையின் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.அவரைத் தொடர்ந்து ஒரு வாரத்திலேயே அவரது தாய் பர்வீன் ராணியும் ‘ஹெர்ட்ஸ்மியர்’ பெருநகர சபையின் முதல் இந்திய வம்சாவளி மேயராக பதவியேற்றார். தாய் மற்றும் மகன் ஒரே நேரத்தில் மேயர்களாக பொறுப்பேற்றது இந்திய வம்சாவளியினருக்கு பெருமை சேர்த்துள்ளது.இதுகுறித்து துஷாரின் தந்தையும் தொழிலதிபருமான சுனில் தஹியா கூறுகையில், “மே 13-ஆம் தேதி துஷார் மேயராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மே 20-ஆம் தேதி பர்வீன் ராணி மேயராக பொறுப்பேற்றார். இது எங்கள் குடும்பத்திற்கும் இந்தியர்களுக்கும் பெருமையான தருணம்” என்றார்.இந்த குடும்பத்தின் பூர்வீகம் ஹரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ரோஹ்னா கிராமம் ஆகும். பிரிட்டனுக்கு செல்லும் முன்பு அவர்கள் நீண்ட காலம் ரோஹ்தக்கில் வசித்து வந்தனர்.

