இரான் தொடர்பான போர் நிலைமையை எதிர்த்து அமெரிக்காவில் முக்கிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் பணியாற்றிய உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்த முடிவை அறிவித்த அவர், அதிபர் தனது போர் தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள கென்ட், “இரானால் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள சக்திவாய்ந்த ஆதரவு குழுக்களின் அழுத்தத்தால் தான் இந்த போர் தொடங்கப்பட்டது” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.ஆனால், வெள்ளை மாளிகை இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. இரான் அமெரிக்காவைத் தாக்கத் திட்டமிட்டிருந்தது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் அதிபரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது.இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு, கென்ட் தனது கருத்துகளின் மூலம் யூதர்களுக்கு எதிரான உணர்வுகளை தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளது.கென்ட்டின் இந்த ராஜினாமா, டிரம்ப் நிர்வாகத்திற்குள் இருந்தே இரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வெளிப்படையாக விமர்சித்த உயர்மட்ட அதிகாரியாக அவரை மாற்றியுள்ளது.இதுகுறித்து பேசிய டிரம்ப், “கென்ட் நல்ல மனிதர் தான், ஆனால் பாதுகாப்பு விஷயங்களில் பலவீனமாக உள்ளார்” என்று கூறினார். மேலும், “அவர் பதவி விலகியது நல்லதே” என்ற எண்ணமே தமக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் கூறிய முக்கிய குற்றச்சாட்டுகள்:
கென்ட் தனது கடிதத்தில், சில உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரிகளும், அமெரிக்காவில் செல்வாக்கு கொண்ட பத்திரிகையாளர்களும் தவறான தகவல்களை பரப்பியதாக கூறியுள்ளார். இதனால், “அமெரிக்காவே முதன்மை” என்ற கொள்கை பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

