கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். 2014 முதல் 2016 வரை கீழடியில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வை முன்னிலை வகித்த அவர், அதன் அடிப்படையில் ஆய்வறிக்கையை தயாரித்து ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தார்.இந்த அறிக்கையில் திருத்தம் செய்யுமாறு ஒன்றிய அரசு கேட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், “உண்மைக்கு புறம்பாக எந்த மாற்றமும் செய்ய முடியாது” என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், எந்த அழுத்தத்திற்கும் தாம் அடிபணிய மாட்டேன் என்றும், சரியான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவது தான் தனது கடமை என்றும் கூறியுள்ளார்.கீழடி ஆய்வறிக்கை 2023ஆம் ஆண்டு ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதனை பெற்றுக்கொண்ட பிறகும் மூன்று ஆண்டுகளாக வெளியிடாமல் அரசு தாமதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆய்வறிக்கையில் மாற்றம் செய்வது குறித்து பேசுவதற்கே இடமில்லை என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

