பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு ஜூன் 24-ல் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதி தேசிய கடவுச்சீட்டு சேவை தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்று (ஜூன் 24) புது டெல்லியில் 14வது கடவுச்சீட்டு சேவை தின நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “கடவுச்சீட்டு (passport) என்பது ஒரு பயண ஆவணமே தவிர, குடியுரிமை ஆவணம் அல்ல. இந்தியர்கள் வெளிநாடுகளில் இருக்கும்போது அவர்களின் தேசியத்தை அது உறுதிப்படுத்துகிறது. ஒரு கடவுச்சீட்டு மிகுந்த ஆய்வுக்குப் பிறகே வழங்கப்படுகிறது. மேலும் அது பல அரசு நிறுவனங்களின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது,” என்று தெரிவித்தார்.
கடவுச்சீட்டு தொடர்பான வெளியுறவு அமைச்சகத்தின் இந்த விளக்கத்தை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

