இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக நேற்று இந்தோநேசியா சென்றார். பிரதமர் மோடியின் விமானம் அந்நாட்டு வான்வெளிக்குள் நுழைந்ததும், இந்தோனேசிய விமானப்படை விமானங்கள் பாதுகாப்பு அரணாக சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்து சென்றன. ஜகார்த்தா விமான நிலையத்தில் தரை இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேரில் சென்று வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தோனேசியா நாட்டின் மிக உயரிய விருதான ‘பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா-இந்தோநேசியா இடையே பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்படி இந்தியாவிடமிருந்து அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் பிரதமர் மோடி, அதிபர் பிரபோவோ சுபியாந்தோ முன்னிலையில் இன்று கையெழுத்தானது. அதேபோல், இந்தியாவிடமிருந்து அஸ்திரா ஏவுகணைகளையும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் வர்த்தகம், கனிம வளம் உள்பட 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

