அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஸ்டாக்டன் நகரில் இந்தியரான ஹர்மன் வீர்சிங் (31) என்பவரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கைது செய்துள்ளனர்.கனடாவின் வான்கூவரில் இருந்து செயல்பட்டு வரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ரவீந்தர் சிங் தண்டாவுடன் ஹர்மன் வீர்சிங்குக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை பல ஆண்டுகளாக போலீசார் தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் கோகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாக ரவீந்தர் சிங் தண்டா மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.இந்த வழக்கில் தொடர்புடைய ஹர்மன் வீர்சிங்குக்கு எதிராக கடந்த ஜூன் 23ஆம் தேதி அமெரிக்க பெடரல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான ஹர்மன் வீர்சிங்கிடம் அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

