ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன், நோவாக் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற தொடரான ஆஸ்திரேலிய ஓபன், மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில், செர்பியாவைச் சேர்ந்தவரும், தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவருமான ஜோகோவிச், இத்தாலியைச் சேர்ந்த 22 வயதான இளம்வீரர் ஜேனிக் சின்னரை எதிர்க்கொண்டார். ஜோகோவிச் எளிதாக வெற்றி பெற்று, இந்த முறையும் கோப்பையை ஏந்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மைதானத்தில் நிகழ்ந்ததோ அதிர்ச்சி ரகம். அதிரடியாக விளையாடிய சின்னர் முதல் இருசெட்களை ஆறுக்கு ஒன்று, ஆறுக்கு இரண்டு என எளிதாக கைப்பற்றினார்.
மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடிய நிலையில், அது டைபிரேக்கர் வரை சென்றது. இந்த செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். இதனால் மைதானத்தில் ஜோகோவிச் ரசிகர்கள் ஆனந்த கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து அரங்கேறிய நான்காவது செட்டில் இரு வீரர்களும் தங்களது முழு ஆற்றலுடன் மல்லுக்கட்டினர். இதில், ஜோகோவிச்சின் சவாலை திறம்பட சமாளித்த சின்னர் ஆறுக்கு நான்கு என செட்டை கைப்பற்றி, முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரரான ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் தொடரை மட்டும் 10 முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

