இஸ்ரோவின் புதிய தலைவராக மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதலுடன் இஸ்ரோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் பல முக்கிய சாதனைகளை அடைந்துள்ளது. எதிர்காலத்தில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் மற்றும் வெள்ளிக் கோளின் ஆய்வுக்கான சுக்ரயான் போன்ற பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் நியமனக்குழு, வி.நாராயணனை இஸ்ரோவின் தலைவராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. அவர் ஜனவரி 14 ஆம் தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக பதவியேற்கவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன், இஸ்ரோவில் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாக உள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் விண்வெளித்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட வி.நாராயணன், இந்திய விண்வெளித்துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரியன் தொடர்பான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி எம்கே 3, சந்திரயான் 2 மற்றும் 3 போன்ற திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார். மேலும் இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கி வருகிறது நாராயணன் தலைமையிலான எல்பிஎஸ்சி குழு. தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

