பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கோவை நகரில் முக்கிய இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழ்நாடு வர இருக்கிறார்.
இதற்காக, நாளை (திங்களன்று) மாலை 4.35 மணிக்கு கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, மாலை 5.30 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் வாகன பேரணியில் ஈடுபடும் பிரதமர் மோடி, மாலை 6.45 மணிக்கு அதனை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவை நகரில் நாளை(18 ஆம் தேதி) காலை 6 மணி முதல் 19 ஆம் தேதி காலை 11 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி இல்லை. மேலும் நாளை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை 100 அடி மேம்பாலம், சிவானந்தா காலனி, டிபி ரோடு, புரூக்பீல்ட் ரோடு, அவினாசி ரோடு, பழைய மேம்பாலம் ஆகிய பகுதிகளின் வழியாக செல்வதை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

