வழக்கமான எண்ணிக்கையை விட ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் பிஸ்கெட் பாக்கெட் வாங்கியவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மணலியில் தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக சன் பீஸ்ட் மேரி லைட் எனும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை டில்லிபாபு வாங்கியுள்ளார். இதன் விலை 24 ரூபாயாகும்.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் 16 பிஸ்கெட்டுகள் இருக்கும். ஆனால் அவர் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டில் 16 பிஸ்கெட்டுக்கு பதிலாக 15 மட்டுமே இருந்தது. இது குறித்து சம்பந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டும் பதில் இல்லை என்பதால் டில்லிபாபு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
ஒரு பிஸ்கெட்டின் விலை 75 பைசா என வைத்தால், ஒவ்வொரு நாளும் 50 லட்சம் பாக்கெட்களை உற்பத்தி செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 29 லட்சம் அளவிற்கு பொதுமக்களை ஏமாற்றுகிறது ஐடிசி நிறுவனம் என டில்லிபாபு தனது புகாரில் தெரிவித்திருந்தார். 16 பிஸ்கெட்டுகள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், 76 கிராம் எடை என்கிற அடிப்படையிலேயே பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது. 4.5 கிராம் வரை எடை குறைவாக இருப்பது குற்றமாக கருதமுடியாது இதற்கு ஐடிசி நுகர்வோர் நீதிமன்றத்தில் பதிலளித்தது.
இந்த வழக்கில் ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை மற்றும் ரூ. 10 ஆயிரம் வழக்கு செலவு தொகை ஆகியவற்றை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என குறைதீர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

