பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கோண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் நியூயார்க் மேயர் ஸோரன் மம்தானியையும் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக பேசிய மம்தானி,“மன்னரிடம் தனியாகப் பேசினால், கோகினூர் வைரத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அவரை நான் கேட்பேன்,” என்று கூறினார்.
தொடர்ந்த நடைபெற்ற சார்லஸ் – மம்தானி சந்திப்பில் கோகினூர் வைரம் பற்றி விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
பல ஆண்டுகளால கோகினூர் வைரத்தை திருப்பி அளிக்குமாறு பிரிட்டன் அரசை இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவின் கோரிக்கை இது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் இந்திய வம்சாவழியை சேர்ந்த மம்தானி கோகினூர் வைரம் பற்றி பேசியிருப்பது மிண்டும் அந்த வைரத்தை விவாத மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கோகினூர் வைரத்தின் வரலாறு
கோகினூர் வைரம், கி.பி. 12 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளில் காக்கத்திய வம்சத்தின் ஆட்சிக் காலத்தில், தற்போதைய தெலுங்கானாவில் வெட்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இந்த வைரம் முகலாயப் பேரரசர்கள், பாரசீக ஷாக்கள், ஆப்கானிய ஆட்சியாளர்கள் கைகளில் இருந்துள்ளது. இறுதியில் சீக்கியப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான மகாராஜா துலீப் சிங்கிடம் இருந்த கோகினூர் வைரத்தை 1849 – ஆண்டு லாகூர் உடன்படிக்கையின் மூலம் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த வைரம் விக்டோரியா மகாராணியின் மகுடத்தில் பதிக்கப்பட்டது.
தற்போது சுமார் 105.6 காரட் எடை கொண்ட கோகினூர் வைரத்தின் மதிப்பு 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

