முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது போல டிரம்ப் வெளியிட்டுள்ள ஏ.ஐ. வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஐ. வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ‘சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை’ என்ற தலைப்பில் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த வீடியோவில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜோ பைடன் உள்பட பல்வேறு ஜனநாயகக் கட்சித் தலைவர்களை கைது செய்வதுபோல காட்சியுள்ளது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்குள், அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஒபாமாவை கைவிலங்கு பூட்டி கைது செய்த, சில நொடிகளுக்குப் பிறகு ஆரஞ்ச் நிற ஜம்ப்சூட் அணிந்து சிறையில் அடைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் தனது சமூக வலைதள அதிகாரப்பூர்வ பக்கத்தில், இது போன்ற வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாரக் ஒபாமா பதவி காலத்தில் அரசியலுக்காக உளவுத்துறையை பயன்படுத்தப்பட்டதாக அந்நாட்டின் தேசிய புலனாய்வு இயக்குனர் குற்றச்சாட்டியுள்ள நிலையில், இந்த விடியோவை டிரம்ப் வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

