2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு எதிராக சிபிஐ மீண்டும் மேல்முறையீடு செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்குவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் கடந்த 2018ஆம் ஆண்டு முற்றிலுமாக நீக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் இருவரையும் விடுவித்தது செல்லாது என்று கூறி விடுதலையை எதிர்த்து சிபிஐ, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்பதாக நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா ஒப்புதல் அளித்துள்ளார். சிபிஐ தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் 2ஜி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ள இந்த வழக்கு மே 20 ஆம் தேதி அளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படுவது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

