விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள மொளசூர் கிராமத்தில் பல்லவர் காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட கொற்றவை சிலையும், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஓடைப் பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நீண்ட தலையலங்காரம் மற்றும் அணிகலன்களுடன் எருமை தலையின் மீது நின்ற நிலையில் கொற்றவை காட்சியளிக்கிறாள். அவளது 7 கரங்களில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. பல்லவர் கலைக்கு சிறந்த உதாரணமாக திகழும் இந்த சிற்பத்தின் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு ஆகும். மொளசூர் ஏரியில் புதைந்த நிலையில் மற்றொரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. மேலும் இரண்டு மூத்ததேவி சிற்பங்கள் மற்றும் ஐயனார் சிற்பமும் இவ்வூரில் அமைந்துள்ளன. பல்லவர் காலத்தில் மொளசூர் கிராமம் சிறப்பான வழிபாட்டில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

