சென்னை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை (மே 28), அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.டிசம்பர் 23, 2024 அன்று இரவு நடந்த இந்த சம்பவத்தில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு பெண் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொதிப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் கண்காணிப்பு மூலம், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை போலீசார் அடையாளம் கண்டு டிசம்பர் 26 ஆம் தேதி கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் சாட்சியம் மூலம், குற்றவாளியை உறுதி செய்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், சமீபத்தில் விசாரணை முடிக்கப்பட்டு, தீர்ப்பு இன்று மே 28 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, நீதிபதி ராஜலட்சுமி ஞானசேகரனை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளார்.மேலும், தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

