ஆடவர்களுக்கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.ஏ பிரிவில் இரு முறை சாம்பியன் இந்தியா, 2009 சாம்பியன் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகள் உள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன. சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, நேபாளம், இத்தாலி அணிகள் உள்ளன. டி பிரிவில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் போட்டியிடுகின்றன.இந்த டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் 5 நகரங்களிலும், இலங்கையில் 3 நகரங்களிலும் நடைபெறுகின்றன. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி, மும்பை, சென்னை மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன. இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டி மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். ஒரு மாதம் நீடிக்கும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடத்தப்படுகின்றன.போட்டிகள் லீக், சூப்பர் 8 மற்றும் நாக்-அவுட் சுற்றுகளாக நடைபெறும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். லீக் சுற்று இன்று தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறும். சூப்பர் 8 சுற்று 21-ம் தேதி தொடங்குகிறது. அரை இறுதி போட்டிகள் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

