காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 21 மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் இதுவரை 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படைகளின் தொடர் முற்றுகையால் காசா முழுவதும் உணவு மற்றும் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனிடையே போரினால் மட்டுமின்றி போதிய உணவு கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இம்மாதத்தில் மட்டும் பட்டினியால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கு பால் இல்லாததால் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் பிறக்கும்போது இருந்த எடையை விட தற்போது எடை குறைவாக உள்ளனர்.

