தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையில், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதுடன், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியின் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் குறிப்புகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். மேலும் அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழில் தயாரிக்கப்பட வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் பிற கடிதங்கள் அனைத்தும் விலக்களிக்கப்பட்ட இனங்களை தவிர்த்து,அனைவரும் தமிழில் எழுத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழில் பதிலளிக்க வேண்டும் என்றும் அரசுப் பணியாளர்கள் அனைத்து ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

