மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால், இந்திய விமானப் போக்குவரத்து துறை இந்த ஆண்டு சிரமங்களை சந்தித்து வருகிறது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட கோடைகால அட்டவணையின் படி, மார்ச் 29 முதல் அக்டோபர் 24 வரை வாரத்திற்கு சுமார் 23,000 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 10% குறைவு ஆகும். கடந்த ஆண்டு வாரத்திற்கு 25,610 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இப்போது ஆயிரக்கணக்கான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த சேவை குறைப்புக்கு முக்கிய காரணம் வளைகுடா நாடுகளுடன் உள்ள விமான சேவைகள் பாதிக்கப்பட்டதுதான். ஈரானில் ஏற்பட்ட பதற்றத்திற்குப் பிறகு, இந்தியாவிலிருந்து அந்த நாடுகளுக்கு செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திட்டமிட்டிருந்த 3,300 சேவைகளில் சுமார் 2,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்களுக்கு பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியதால் எரிபொருள் செலவும் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு குறைவு காரணமாக பராமரிப்பு, குத்தகை, ஊழியர் சம்பளம் போன்ற செலவுகளும் உயர்ந்துள்ளன. இதை சமாளிக்க நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், அது முழுமையான தீர்வாக இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

