தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது

ஆப்ரிக்க நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி தக்க பதிலடி கொடுத்திருக்கின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் குயிண்டன் டிக்காக் 80 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அதற்கு அடுத்தபடியாக பவுமா 48 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனை அடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில், இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரராக ரோகித் சர்மா வழக்கம் போல் தனது அதிரடி காட்டினர். மறுபுறம் ஜெய்ஸ்வால் டெஸ்ட் இன்னிங்ஸ் போல் தனது இன்னிங்ஸை கட்டமைத்தார். 70 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 40 ரன்கள் மட்டுமே கடந்த ஜெய்ஸ்வால் அதன் பிறகு அதிரடியால் விளையாடினார்.
ரோகித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 75 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து விராட் கோலி களத்திற்கு வந்து தன்னுடைய பழைய பார்மை அவர் வெளிகாட்டினார். பவுண்டரி சிக்சர் என விரட்டிய இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 116 பந்துகளில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுபுறம் அதிரடி காட்டிய விராட் கோலி 40 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். ஜெய்ஸ்வால் 121 பந்துகளில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 116 ரன்களும் விராட் கோலி 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 39.5 ஓவர்களில் வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் மகராஜ் ஒரு விக்கெட்டை எடுத்தார். தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் அண்மையில் வீழ்த்தி இருந்தது. தற்போது இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் வீழ்த்தலாம் என்ற எண்ணத்தில் வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *