இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா சென்றார். இந்திய வம்சாவளியினர் அவருக்கு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோருடன் சந்தித்து பேசவுள்ளார். இதற்கு முன், 3 நாட்கள் பிரான்சில் பயணித்த பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துவிட்டு நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டார். பிரான்சில் இருந்து தனி விமானத்தில் அமெரிக்கா வந்த பிரதமர் மோடி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை வாஷிங்டன் டிசி நகரில் அடியெடுத்து வைத்தார். அமெரிக்காவில் அவர் வருகைக்கு இந்திய வம்சாவளியினர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரண்டு வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து உரையாடுகிறார். டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மோடி அவரை சந்திக்கும் முதல் சந்திப்பு இது ஆகும்.
இரு தலைவர்களுக்கிடையிலான நெருங்கிய நட்பு தொடர்ந்திருக்கும் நிலையில், இந்த சந்திப்பு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பில் அடைந்த வெற்றிகளை தொடர இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அமெரிக்காவுடனான கூட்டாண்மையை தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி போன்ற துறைகளில் மேலும் மேம்படுத்த ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவது முக்கியமாகும் என அவர் தெரிவித்தார். மோடி, தனது நண்பர் டிரம்ப் உடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒரு விரிவான கூட்டுறவை உருவாக்க, தனது முதல் பதவிக்காலத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை அவர் மிகவும் அன்புடன் நினைவில் வைத்துள்ளார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.