விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தணிக்கை குழுவின் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்த தேவையில்லை என படக்குழு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக, ‘ஜனநாயகன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்ததுடன், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது, படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதால் வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. சென்சார் போர்டின் மறு ஆய்வு குழு 20 நாட்களுக்குள் படத்தை பார்த்து தேவையான திருத்தங்களை தெரிவித்த பின், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

