மத்திய அரசின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கலாசாரம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து மேம்படுத்தும் கிராமங்களை அங்கீகரிக்கும் நோக்கில் சிறந்த சுற்றுலா கிராம விருதுகள் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன, இதற்காக மொத்தம் 991 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.எட்டு பிரிவுகளின் அடிப்படையில் 36 கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமங்களாக மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கீழடி, பாரம்பரிய பிரிவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆன்மிகம் மற்றும் ஆரோக்கியம் என்ற பிரிவில், தமிழகத்தில் உள்ள மேல்காலிங்கம்பட்டி என்ற கிராமம் சிறந்த சுற்றுலா கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா கிராம விருதுகள் பற்றிய தகவல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, உலகின் முன்னணி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் மையமாக விளங்கும் கீழடியில், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ரூ.18.8 கோடி செலவில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. பழந்தமிழ் சமூகத்தின் முன்னணி சிந்தனைகளை பிரதிபலிக்கும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக வருகிறார்கள். மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக’ கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
