காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 14ம்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதியான ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

