விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிட உள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்குமான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், திமுக, அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தமது வேட்பாளர்களை இறுதி செய்து பிரசார களத்திற்கு தயாராகியுள்ளன. இதில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), கடலூர், தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன.
இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளார். எனவே, விருதுநகர் தொகுதி கடும் சவால் நிறைந்த தொகுதியாக தேமுதிகவுக்கு அமைந்துள்ளது.
LS