பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக மிண்டானாவ் தீவு பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜெர்மனியின் புவி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. முதலில் நிலநடுக்கத்தின் அளவு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது 7.8 ரிக்டர் என உறுதி செய்யப்பட்டது.நிலநடுக்கத்தின் அதிர்வு மிண்டானாவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததால் மக்கள் அச்சத்தில் வெளியேறினர்.சுனாமி அபாயம் காரணமாக பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் பல சர்வதேச எச்சரிக்கை மையங்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டன. கடல் அலைகள் வழக்கத்தை விட ஒரு மீட்டர் உயரம் வரை எழக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் தைவான், ஜப்பான், குவாம் மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பகுதிகளிலும் சிறிய அளவிலான அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் கட்டிடங்கள் குலுங்குவது, போக்குவரத்து சிக்னல்கள் அதிர்வது மற்றும் சில கட்டிடங்களில் சேதம் ஏற்பட்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சில பகுதிகளில் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது மீட்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழப்பு அல்லது காயம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதே நேரத்தில், கடலோரப் பகுதிகளில் நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பசிபிக் பெருங்கடல் “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் நில அதிர்வு அதிகம் ஏற்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால், அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை செயல்பாடுகள் பதிவாகுவது குறிப்பிடத்தக்கது.

