இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார்.ஆக்ஸியம் மிஷன் – 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான, சுபான்ஷு சுக்லா, கடந்த மாதம் பூமிக்குத் திரும்பினார். இதையடுத்து, அவரது இந்தப் புதிய சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இந்தியா வந்த சுபான்ஷு சுக்லா பிரதமர் மோடியை, கடந்த ஆக.18 ஆம் தேதி நேரில் சந்தித்து, விண்வெளிக்கு அவர் கொண்டுச் சென்ற தேசிய கொடி உள்ளிட்டவற்றை பிரதமருக்கு பரிசளித்தார். இதனைத் தொடர்ந்து, தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, அவர் இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார்.இந்தச் சந்திப்பில், குடியரசுத் தலைவருடன் தனது விண்வெளி அனுபவங்களை அவர் பகிர்ந்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

