கால்பந்து உலகின் ஜாம்பவானாக விளங்கும் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்தார். ‘GOAT இந்தியா டூர் 2025’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார். இந்த வருகையின்போது, கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார். மெஸ்ஸியின் வருகையை முன்னிட்டு நகரமெங்கும் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் திரண்டனர். அவருக்கு கொல்கத்தாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சிலையை திறந்து வைத்த பின்னர், மெஸ்ஸி சால்ட் லேக் ஸ்டேடியத்தில் ரசிகர்களை சந்தித்தார். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் மெஸ்ஸியை அருகில் இருந்து பார்க்க முடியாததால் சில ரசிகர்கள் கோபமடைந்தனர். மேடைக்கு வந்த பின்னரும் முக்கிய பிரமுகர்கள் மெஸ்ஸியை சூழ்ந்து கொண்டிருந்ததால், ரசிகர்களின் ஆத்திரம் அதிகரித்தது. இதன் காரணமாக, சிலர் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த மைதானத்தில் திடீரென பதற்றமான சூழ்நிலை உருவானது.வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர். பாதுகாப்பு காரணங்களால், இந்த சம்பவத்துக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே மெஸ்ஸி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

